Wednesday, June 13, 2012

தமிழ் வளர்த்த தருமையாதீனம் -2

பழமொழி விளக்கம் எனும் தண்டலையார் சதகம்


தண்டலை என்பது சோழ நாட்டுக் காவிரித் தென்கரையில் அமைந்துள்ள சிவத் தலங்களுள் ஒன்று. 'திருத் தண்டலை நீள்நெறி' என்பது இதன் முழுப்பெயர். இத்தலத்திலுள்ள சிவபெருமான் மீது படிக்காசுப் புலவர் பாடிய நூலே தண்டலையார் சதகம் ஆகும்.


நண்பர்களே! இதுவரையும் சதக இலக்கியங்கள் பற்றிப் பொதுவான செய்திகளை அறிந்தோம். இனித் தண்டலையார் சதகம் பற்றிய சிறப்புச் செய்திகளை அறிய இருக்கின்றோம்.

நூல் ஆசிரியர் வரலாறு


இந்நூலை இயற்றிய புலவர் படிக்காசுப் புலவர் ஆவார். தொண்டை நாட்டைச் சார்ந்தவர். இவர் இல்லறத்தில் இருந்து பின்பு துறவறம் பூண்டவர். அதனால் இவர் படிக்காசுத் தம்பிரான் என்றும் சொல்லப்படுகின்றார். திருவாரூர் வைத்தியநாத நாவலரிடம் இலக்கண இலக்கியங்களைக் கற்றுப் புலமை பெற்றார்.

காயல்பட்டினம் சீதக்காதி முதலியோரிடம் புலமைக்காக வெகுமதிகள் பெற்றவர். இறையன்பு மிகுந்தவர். பல தலங்களுக்கும் சென்று வழிப்பட்டுள்ளார். தில்லையில் தங்கி இருந்தபோது கையில் பொருள் இல்லை. தில்லை சிவகாமி அம்மையைப் பாடினார். ஐந்து பொற்காசுகள் அம்மையின் அருளால் வீழ்ந்தன. காசுகள் விழும்போது 'புலவருக்கு அம்மையின் பொற்கொடை' என்ற ஒலி எழுந்தது. அவற்றைத் தில்லைவாழ் அந்தணர்கள் பொன் தட்டில் வைத்துப் பல சிறப்புகளுடன் புலவருக்கு அளித்தனர். இக்காரணத்தால் இவருக்குப் 'படிக்காசுப் புலவர்' என்ற பெயர் வழங்கலாயிற்று.


இப்புலவர் தருமபுர ஆதீனம் ஆறாவது குரு மகா சந்நிதானம் திருநாவுக்கரசு தேசிகரிடம் ஞானோபதேசம் பெற்றார். ஒரு நாள் தில்லையில் கூத்தப் பிரானது திருமுன்பு இருந்த திரைச்சீலை தீப்பற்றி எரிந்ததை யோகக் காட்சியால் உணர்ந்தார். தம்முடைய கைகளைப் பிசைந்தார். அங்கே பற்றிய தீ அணைந்தது. இவ்வாறாக அருளிச் செயல்கள் பலவற்றைப் புலவர் நிகழ்த்தி உள்ளார்.


இவரால் இயற்றப்பட்ட நூல்கள்


தொண்டை மண்டல சதகம்

தண்டலையார் சதகம்

சிவந்து எழுந்த பல்லவன் உலா

பாம்பு அலங்காரம் வருக்கக் கோவை

திருச்செங்கோட்டுத் திருப்பணி மாலை

தண்டலையார் சதகம் - ஓர் அறிமுகம்

''பழமொழி விளக்கம் எனும் தண்டலையார் சதகம்'' என்பது இந்நூலின் முழுப்பெயர். திருக்குறள், நாலடியார் முதலிய நீதி நூல்களில் பல்வேறு அறங்கள் கூறப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். அதுபோன்ற அறங்கள் பலவற்றைத் தண்டலையார் சதகம் எடுத்துரைக்கிறது.

இந்நூலுக்குப் பழமொழி விளக்கம் என்ற மற்றொரு பெயரும் உண்டு.


''இசைந்த பழமொழி விளக்கம் இயம்பத்தானே''

''விளங்கு பழமொழி விளக்கம் அறிந்துபாட''

(தண்.சத. 1, 2)


என வரும் காப்புச் செய்யுட்களால் இதனை அறியலாம். இந்தச்சதகப் பாடல்களின் ஈற்றடியில் உலகில் வழங்கும் ஏதேனும் ஒரு பழமொழி இடம்பெற்று இருக்கும். தண்டலைப் பதியில் கோயில் கொண்டிருக்கும் 'நீள்நெறி நாதர்'' இச்சதகத்தின் தலைவர் ஆவார். இந்நூலுள் நூறு என்ற எண்ணிக்கையை விடக் கூடுதலாகப் பாடல்கள் உள்ளன. அவை பிற்காலத்து இடைச் செருகலாக இருக்க வேண்டும் என்று ந.வீ. செயராமன் கருதுவார்.

No comments:

Post a Comment